Friday 13 June 2014

குரு பக்தி

குரு பக்தி
ஈச்வரனைக் காட்டிலும், குரு பெரியவர்;ஈசுவர பக்தியைக் காட்டிலும் குருபக்தி விசேஷம் என்கிறார்களே, ஏன்?என்று கேட்டால்: ஈசுவரனை யாரும் பார்க்கவில்லை. பிரத்தியக்ஷமாக நாம் பார்க்ககடிய ஒரு மனிதர் எப்போதும் சுத்தமாய், ஞானம் உடையவராய், அசைவு இல்லாத சித்தம் உடையவராய், அப்பழுக்கு இல்லாமல் நமக்குக் கிடைத்து விட்டால் நாம் எந்த மனச்சாந்திக்காக ஈசுவரனிடத்தில் போகிறோமோ அந்த சாந்தி இவரிடம் பக்தி செலுத்தினாலே கிடைத்து விடுகிறது. அதனால் தான்,

குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணு:குருர் தேவோ மஹேச்வர:|

என்று சொல்லியிருக்கிறார்கள். இந்த ச்லோகத்தில் குருவுக்கும் பரமாத்மாவுக்கும் அபேதம் சொல்லியிருப்பது ஒரு விசேஷம். Incidental - ஆக இதிலேயே இன்னொரு விசேஷம், இதில் விஷ்ணு, சிவன் இருவரையும் சொல்லியிருப்பதால் இந்த ச்லோகத்தைச் சொல்லி நாம் குருவந்தனம் பண்ணினால் நமக்கு சிவ- விஷ்ணு அபேத பாவமும் உண்டாகி விடும். ஜகத்தை ஸ்ருஷ்டிப்பது, பரிபாலிப்பது போன்ற பல காரியங்கள் ஈசுவரனுக்கு இருக்கின்றன. அவை எல்லாம் குருவுக்கு இல்லை. அவனுக்கு ஆபீஸ் உண்டு;இவருக்கு ஆபீஸ் இல்லை. ஆபீஸ் இருக்கிறவனிடம் போய்த் தொந்தரவு கொடுப்பதைவிட ஆபீஸ் இல்லாமல் சும்மா இருக்கிறவரிடம் நம் காரியத்தை மிக எளிதாக முடித்துக் கொண்டு விடலாம். ஈச்வரனுக்கு என்ன என்ன உத்தமமான குணங்கள் எல்லாம் இருக்கின்றனவோ அவை எல்லாம் இந்த குருவிடத்தில் இருக்கின்றன. இவர் சுத்தமானவர், பொய் சொல்லாதவர்; வஞ்சனை தெரியாதவர்;இந்திரியங்களை எல்லாம் வென்றவர்;கருணை நிறைந்தவர்;மகா ஞானி. இவரைப் பிரத்யக்ஷமாக பார்க்கிறோம். பகவானையோ பிரத்யக்ஷத்தில் பார்க்கிறோம். பகவானையோ பிரத்யக்ஷத்தில் பார்க்க முடியவில்லை. ஆகவே குருவின் திருவடிக் கரங்களைப் பற்றிக்கொண்டு பக்தி செய்ய ஆரம்பித்துவிட்டால், ஈசுவர பக்தியினால் நமக்கு என்ன அனுகூலங்கள் உண்டாகின்றனவோ அத்தனையும் சுலபமாக உண்டாகிவிடும். அதனால் தான் குருபக்தி ¢உயர்ந்தது என்ற சொன்னார்கள்.

ஆனால் தெய்வ பக்தியை மறக்கக்கூடாது. இந்த குருவை இவனோடு சேர்த்து வைப்பதே தெய்வந்தானே? தெய்வ அநுக்ரகம் இல்லாவிட்டால் இந்த குருவை இவன் எப்படி அடைவான்? துர்லபம் த்ரயமேவைதத் தேவாநுக்ரஹ ஹேதுகம்| மநுஷ்யத்வம் முமுக்ஷ§த்வம் மஹாபுருஷஸம்ச்ரய:| '' தெய்வாநுக்ரஹத்தாலேயே ஒருத்தனுக்குக் கிடைக்கிற மூன்று பெரிய வாய்ப்புகள்: ஒன்று, மநுஷ்ய ஜன்மா கிடைப்பது. இரண்டு, ஸத்ய தத்துவத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை பிறப்பது; மூன்று, மஹா புருஷனான ஒரு குரு கிடைப்பது''என்று ஆசார்யாள் 'விவேக சூடாமணி' ஆரம்பத்தில் சொல்லியிருக்கிறார். எல்லோருக்கும் எக்காலத்திலும் குரு ஈச்வரன்தான்: தக்ஷிணாமூர்த்தி தான். ஸ பூர்வேஷாமபி குரு:காலேநாநவச்சேதாத்|| நம் குருவுக்கும் அந்த குருவுடைய குருவுக்கும் அவருடைய குருவுக்கும் ஞானம் எப்படிப் பூர்ணமாக ஏற்பட்டிருக்கும்?இப்படி ஒவ்வொருவருக்கும் ஒரு குருவைச் சொல்லிக்கொண்டே போனால் கடைசியில் ஒருத்தருக்கு ஸாக்ஷ£த் ஈசுவரனேதான் குருவாக இருந்து ஞானத்தை தந்திருக்க வேண்டும் என்று தெரியும். அதனால்தான் தெய்வத்தை மறக்கக் கூடாது என்றார்கள். இதையே வேறு விதமாகவும் சொல்வதுண்டு. குரு, ஈசுவரன் என்ற இரண்டு பேர் என்று வைத்துக் கொள்ளாமல் ஈசுவரனே குருவாக வந்திருக்கிறான் என்று வைத்துக் கொண்டு விட்டோமானால் குரு பக்தி, ஈசுவர பக்தி என்ற இரண்டு தனித்தனியாகப் பண்ணவேண்டாம். குருவே ஈசுவரன் என்று கருதி அந்த குருவான ஈசுவரன் ஒருத்தனிடத்திலேயே பூர்ண் சரணாகதி பண்ணிவிடலாம். குரு பரம சுத்தமானவராக, உத்தமமானவராக இல்லாவிட்டாலும்கூட, இவர் மூலமாக நாம் நித்திய சுத்தனும் உத்தமோத்தமனுமான ஈசுவரனையே பக்தி பண்ணுவதால், அந்த ஈச்வரனே இவர் மூலமாக நமக்கு அநுக்கிரஹம் பண்ணிவிடுவான். இதனால் தான் குருவையே ப்ரம்மா, விஷ்ணு, சிவன், இந்த மூன்றுக்கும் ஆதாரமான பரப்பிரம்மம் என்று எடுத்த எடுப்பில் சொல்லிக் கொடுக்கிறார்கள்.

குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணு : குருர் தேவோ மஹேச்வர :|
குருஸ் ஸாக்ஷ£த் பரப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீகுரவே நம :||

பிரம்ம வித்யா ஆசார்யர்களில் முக்கியமான வியாஸரைப் பற்றிச் சொல்கிறபோது குருர் ப்ரம்மா சுலோகத்தின் தாத்பரியத்தையே இன்னும் ரஸமாகச் சொல்வதுண்டு. அசதுர்வதநோ ப்ரஹ்மா த்விபாஹ§ரபரோ ஹரி :| அபாலலோசந சம்பு : பகவாந் பாதராயண :|| என்பார்கள். பாதராயணர் என்று வியாஸருக்குப் பெயர். அவர் 'அசதுர்வதநோ ப்ரஹ்மா', அதாவது நான்கு முகம் இல்லாத ஒரு முக பிரம்மா; த்விபாஹ§:அபரோ ஹரி:',நாலு கையில்லாமல் இரண்டு கையுள்ள ஹரி, அதாவது விஷ்ணு, அபால லோசந:சம்பு:', நெற்றிக் கண் இல்லாத போதிலும் சிவன்! குருவைவிட சிரேஷ்டமானவர் இல்லை. நமக்கு அவரிடத்தில் பூர்ணமான நம்பிக்கை ஏற்பட வேண்டும். அது நிஜமான நம்பிக்கையாக இருக்க வேண்டும். நமக்கு அவரிடத்தில் ஈசுவரனே இப்படி வந்திருக்கிறான் என்ற நம்பிக்கை வந்துவிட்டால், அப்புறம் தனியாக v £மிகூட வேண்டாம். இந்த நம்பிக்கையே, அவரிடத்தில் நாம் வைக்கிற பக்தியே நம்மைக் கடைத்தேறச் செய்து விடும். வைஷ்ணவர்களுக்கு ஆசார்ய பக்திதான் மிகவும் பிரதானம். ஈசுவர அபராதம் பண்ணினால் ஈசுவரனிடத்திலேயே போய் மன்னிப்புக் கேட்க வேண்டுமென்பது இல்லை;ஆசார்யன் மன்னித்து விட்டாலே போதும். ஈசுவரனுடைய கோபம் தணிந்து விடும். ஆனால் குருவினிடத்தில் அபசாரம் பண்ணிவிட்டு ஈசுவரனிடத்தில் போனாலும் ஒன்றும் நடக்காது. குருவிடத்திலேயே போய்த்தான் அந்த அபசாரத்துக்கும் நிவிருத்தி தேடிக்கொள்ள வேண்டும் என்று ஸ்வாமியே சொல்லி விடுவார். சிஷ்யனுக்காக குருவே பரமாத்மாவிடம் சிபாரிசு பண்ணினால் அவருக்குக் கோபம் போய் இவனுக்கு அநுக்கிரஹம் பண்ணிவிடுவார். ஆனால் குருவுக்கே கோபம் வந்து விட்டால் ரக்ஷிக்கிறவர் எவருமே இல்லை. இப்படி ஒரு ச்லோகம் கூட இருக்கிறது. அதனால்தான் குரு பக்தியை மிகவும் விசேஷமாக சாஸ்திரங்கள் சொல்கின்றன. உத்தமமான குரு கிடைக்கவில்லை என்றால், அறைகுறையாக ஒரு குரு இருந்தாலும் அவரை வழிகாட்டியாக வைத்துக்கொண்டு ஈசுவர பக்தி செய்ய வேண்டும். நாம் பக்தி செய்வதால் ஈசுவரனுக்கோ குருவுக்கோ ஒரு லாபமும் இல்லை. நமக்கேதான் பெரிய லாபம், என்ன லாபம் என்றால் : நாம் அழுக்கு உடையவர்களாக இருக்கிறோம்;சஞ்சலம் உடையவர்களாக இருக்கிறோம். மனஸை ஒரு நிமிஷங்கூட ஒர் இடத்தில் நிறுத்த முடியாதவர்களாக இருக்கிறோம். எப்போதும் சுத்தமாக, நிரம்பிய ஞானம் உடையவனாக, அசங்காமல், ஆடாமல், பட்ட கட்டை மாதிரியாக இருக்கிறவனை நாம் நினைத்தால்தான், நாம் நினைக்கிற அவனது நிச்சலமான நிலை நமக்கும் வரும். நாமே அவனாக ஆகிவிடுவோம். ஈசுவரனைத்தான் அப்படி நினைக்க வேண்டும் என்பது இல்லை. இப்படிப்பட்ட குணங்கள் உடையதாக எதை எடுத்துக்கொண்டாலும், நம்மைப் போன்ற ஒரு மனிதரையே இவ்வளவு குணங்கள் உடையவராகக் கருதி அவரையே குருவாக நினைத்து பக்தி செய்தாலும் நாம் அப்படியே ஆகிவிடுவோம். மனஸ் நின்றால்தான் ஆத்மா பிரகாசிக்கும்; அதாவது நமது நிஜமான ஆனந்த நிலை தெரியும். மனஸை நிறுத்துவதற்காகத்தான் குரு பக்தி வேண்டும், ஈசுவர பக்தி வேண்டும் என்று நம் சாஸ்திரங்கள் சொல்கின்றன.

குருவின் அநுக்கிரஹத்தில்தான் ஞானம் கிடைக்கும் என்ற விஷயம் சாந்தோக்ய உபநிஷத் சொல்லியிருக்கிறது. ஆசார்யவான் புருஷோ வேத - ஆசார்யனைப் பெற்ற புருஷன் தான் ஞானத்தை அடைகிறான் - என்று அதில் இருக்கிறது. ஒரு சின்னக் கதை போல இதைச் சொல்லியிருக்கிறது. கந்தார தேசத்தை ( இந்த நாள் காண்டஹார் என்பது அதுதான்) சேர்ந்த ஒருத்தனின் கண்ணைக் கட்டிக் கொண்டு போய் ஜனசஞ்சாரமில்லாத ஒரு இடத்தில் விட்டு விட்டால் எப்படி - யிருக்கும்?அவன் எப்படித் தன் ஊருக்குத் திரும்புவான்?கிழக்கா, மேற்கா, தெற்கா, வடக்கா என்று தெரியாமல்தானே தவித்துக்கொண்டிருப்பான்? இந்த மாதிரிதான் மாயை நம் கண்ணைக் கட்டி இந்த லோகத்தில் விட்டிருக்கிறது. அப்புறம் கண்ணைக் கட்டிக் காட்டில் விடப்பட்டவனிடம் ஒருவன் வருகிறான். கட்டை அவிழ்த்து விடுகிறான். கந்தார தேசத்துக்குப் போகிற வழியையும் சொல்லிக்கொடுக்கிறான். அதற்கப்புறம் இவன் அழவில்லை. பயப்படவில்லை. அவன் சொன்ன மாதிரியே போய்த் தன் ஊரை அடைகிறான். இந்த மாதிரிதான் ¢ஆசார்யனின் உபதேசத்தால், நாம் எங்கேயிருந்து வந்தோமோ அந்தப் பரமாத்ம ஸ்தானத்துக்கு வழியைத் தெரிந்து கொண்டு அங்கே போய்ச் சேருகிறோம் என்று சாந்தோக்யம் சொல்கிறது. ஜகத்குரு என்று பிரஸித்தி பெற்ற ஸ்ரீ சங்கர பகவத்பாதாள் எங்கு பார்த்தாலும் குருவின் பெருமையைச் சொல்கிறார். ''ஒருவனுக்கு எத்தனைதான் பெருமை இருந்தால் என்ன?குருவின் சரணாரவிந்தங்களில் அவன் தன் மனஸைக் கட்டிப் போட்டிருக்காவிட்டால் என்ன பிரயோஜனம்?'என்று ஒரே ஒரு தரம் தரம் கேட்கவில்லை. நாலு தரம், '' தத:கிம்? தத:கிம்?தத:கிம்? தத:கிம்?''என்று கேட்கிறார். ''குர்வஷ்டகம்'' (அதாவது குரு ஸ்துதியான எட்டு ச்லோகங்கள்) என்ற ஸ்தோத்தரத்தில், ஒவ்வொரு அடி முடிவிலும் இப்படி நான்கு தரம், மொத்தம் முப்பத்திரண்டு தடவை கேட்கிறார். முடிவில், தம் சரீரத்தைவிட்டு அவர் புறப்படுவதற்கு முந்திப் பண்ணின உபதேசத்திலும், ஸத் வித்வான் உபஸ்ருப்யதாம் ப்ரதிதினம் தத்பாதுகா ஸேவ்யதாம் ப்ரஹ்மைகாக்ஷரம் அர்த்யதாம் ச்ருதிசிரோவாக்யம் ஸமாகர்ணயதாம் என்கிறார். ''ஸத்தான வித்வானை ஆசார்யனாக வரிப்பாயாக! தின்தோறும் அவருக்குப் பாத பூஜை பண்ணுவாயாக!அவரிடமிருந்து உபதேசம், பிரணவ உபதேசம், உபநிஷத மஹாவாக்ய உபதேசம் எல்லாம் வாஙகிக் கொள்வாயாக!'' என்கிறார். (''ப்ரதி தினம் தத்பாதுகா ஸேவ்யதாம்''என்று சொன்ன பகவத் பாதாளின் பாதுகைக்கு, இன்றைக்கும், ஒரு நாள் விடாமல் பிரதி தினமும் மடத்தில் பாத பூஜை நடந்து கொண்டிருக்கிறது!) இங்கே சொன்னது ஸந்நியாஸம் தருகிற ஸந்நியாஸ குருவைப் பற்றி ஆகும். அந்த ஆசிரமத்தில்தான் பிரணவோபாஸனை, மஹாவாக்ய அநுஸந்தானம் இவற்றின் மூலம் மோக்ஷத்தைத் தேடுவது. இது நாலு ஆச்ரமங்களில் கடைசி. முதலில் பிரம்மச்சரிய ஆச்ரமத்தில் ஒரு கிருஹஸ்த குருவை அடைந்து வேதாத்யயனமும், வேதகர்மாநுஷ்டானமும் பண்ணுவதிலிருந்து ஆரம்பித்து, கடைசியில் இந்த ஸந்நியாஸ நிலைக்கு வருமாறு ஆசார்யாள் உபதேசித்திருக்கிறார். முதலில் வேத கர்மா எதற்கு?மனமுடங்கிப் பரமசாந்தமாக இருந்து கொண்டு கேட்டால்தான் குருமூலமாகப் பெறுகிற பிரணவமும் மஹாவாக்யமும் பரம புருஷார்த்தமான மோக்ஷத்தைக் கொடுக்கும். மனம் ஒருமைப்பாட்டுகேட்காவிட்டால் பிரயோஜனம் இராது. உழுத இடத்தில் ஊன்றினால் தான் விதை பிரயோஜனப்படும். நாம் எவ்வளவோ உபந்நியாஸம் கேட்கிறோம்;கீதை முதலானதுகளை நிறைய வாசிக்கிறோம். ஆனாலும் நமக்கு ஏன் துக்கம் போக வில்லை? ஞானம் உண்டாகவில்லை?நாம் சித்த சுத்தி பண்ணிக்கொள்ளாமலே கேட்பதாலும் படிப்பதாலும்தான் அது நிரந்தரமாக நின்று பலன் தருவதில்லை. ''வைதிக கர்மாக்களை நிறையப் பண்ணி ஈச்வரார்ப்பணம் செய். பலனை எதிர்பார்க்காமல், அதை பகவத் ஆராதனமாக நினைத்துக் கொள்''என்று ஆசார்யாள் இந்த உபதேசத்தின் ஆரம்பத்தில் சொன்னது, சித்த சுத்தியை, மனஸை உழுதாக வேண்டும். அது முதல் காரியம். அப்புறம் ஜலம் பாய்ச்ச வேண்டுமல்லவா?அதுதான் பக்தி. நம் ஹ்ருதயத்தில் ஜலம் பாய்ச்சுவது பக்திதான்.ஈச்வரனிடமும், ஆசார்யனிடமும் பக்தி செலுத்த வேண்டும். குரு பக்தி இருந்தால் மனது தானாக சாந்தத்தை அடைகிறது. பெரியவர்களுக்கு, மஹான்களுக்கு முன் ஒன்றை வாசித்தாலும் கேட்டாலும் அல்லது அவர்களே ஒன்றைச் சொன்னாலும், அது நன்றாகப் பதிகிறது. ஏனென்றால் அவர்கள் ஸந்நிதானத்தில் நம் மனஸ் ஒரு விதமான சாந்தத்தோடு இருக்கிறது. கிளப்பலும், லைப்ரரியிலும் இப்படி இருக்கவில்லை. அதனால்தான் அங்கெல்லாம் படிப்பதும், கேட்பதும் நிற்காமல் ஒடிப்போய்விடுகிறது. மனஸ் குரு பக்தியில் நனைத்தால் உடனே பலன் உண்டாகும். அதனால்தான் மஹான்களாக இருக்கிறவர்களிடமும் உபதேசம் கேட்க வேண்டும், எதையும் குருமுகமாக கற்க வேண்டும் என்பது. நாம் எவ்வளவோ படித்திருக்கிறோம். ஆனாலும் நமக்குள்ள அஞ்ஞான தடிப்பு கொஞ்சம் கூட குறையவில்லை. அது எந்த இடத்தில் குறையுமோ அங்கே போய்ச் சேர்ந்தால் அஞ்ஞானத்தடிப்புத் தேய்ந்து போய், ஞானம் உதயமாகத் தொடங்கும். அப்படிப்பட்ட இடம் தான் ஆசார்யனின் சந்நிதி. பிரம்மசரிய ஆசிரமத்தில் இப்படிச் சித்த சுத்திக்காக ஒரு குருவிடமிருந்து வேதங்களைத் தெரிந்து கொண்டபின், கிருஹஸ்தாச்ரமத்தில் அந்த வேதத்தில் சொன்ன கர்மாக்களைப் பண்ணி மனஸின் அழுக்குக்களையெல்லாம் போக்கடித்துக் கொண்டபின், ஸந்நியாஸ ஆசிரம குருவிடம் மஹாவாக்ய உபதேசத்தை வாங்கிக் கொண்டால் அது பயிராக விளைகிறது. அதாவது ஜீவன் பிரம்மத்தோடு ஐக்கியத்தைப் பெறுகிறான். அதற்கு வழி பண்ணுவது, ஆரம்பித்திலும் சரி, முடிவிலும் சரி குரு தான். இதனால் தான் குருபக்தியை எங்கு பார்த்தாலும் சிறப்பித்துச் சொல்லியிருக்கிறது.

தெய்வத்தின் குரல் 
http://www.kamakoti.org/tamil/KURAL6.htm 

Thursday 14 April 2011

குருபக்தி



நாம் எதைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்றாலும் பெரியவர்கள் மூலந்தான் தெரிந்து கொள்கிறோம். குழந்தை தன தாயார் தகப்பனார் யார் என்பதை, தாயரிடத்திலோ, தகப்பனாரிடத்திலோ அல்லது பெரியவர்கள் மூலமாகத்தான் தெரிந்தது கொள்ள முடியும். மாதா, பிதா, குரு ஆகிய இந்த மூன்று பேர்களும் நமக்குப் பிரத்தியக்ஷ தெய்வங்கள். மாதா பிதாக்கள் நம் சரீரத்தை காப்பாற்றுகிறார்கள். ரோகம் வந்தால் சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்கிறார்கள். அவர்கள் நம் தேகத்தை பொறுத்த மட்டும் ரட்சிப்பார்கள். ஆனால், இந்ததத் தேகம் திரும்பியும் திரும்பியும் ஜென்மம் எடுக்கக் காரணமாகிறது.


சம்சார மென்கிறது ஒரு பெரிய வியாதி. அதிலிருந்து தப்பிக்க, குருதான் உபகாரம் பண்ணமுடியும். எக்காலத்திலும் வியாதி இல்லாத நிலையைகொடுக்க, குரு  ஒருவரால்தான் முடியும். அவர்தான் கரையேற்ற முடியும். இவ்வளவு உயர்ந்த்தவரான குருவுக்கு உபமானம் ஏதாவது சொல்ல முடியுமா என்று பார்த்தால்-ஒருவன் பணக்காரனாக இருந்தால், குபேரன் போல பணக்காரன் என்கிறோம். அந்த மாதிரி குரு யாரைப்போல இருக்கிறார் என்றால், அவருக்கு நிதர்சனம் இல்லை. ஆனால், குருவின் சக்தி பரம்பரையாய் எல்லாச் சிஷ்யர்களுக்கும் வரக்கூடியது. குருவிடம் பக்தி பண்ணினால் வேண்டியதெல்லாம் கிடைக்கும். இதற்கு அநேக புராணக்கதைகள் உண்டு. ஓர் ஊரில் ஒரு குரு இருந்தார். அவரிடம் அநேக சிஷ்யர்கள் இருந்தார்கள். அவர்களுள் ஒரு சிஷ்யன் மிகவும் மந்தபுத்தியுள்ளவன. மற்ற சிஷ்யர்கள் எல்லா வித்தைகளையும் கிரஹித்துக்கொண்டு மிகவும் மேதாவியாய் இருந்தார்கள். படிப்பை முடித்துக்கொண்டு குருவினிடம் அனுமதி பெற்றுக்கொண்டு போய்விட்டார்கள். இந்தச் சிஷ்யன் மட்டும் சுச்ரூஷை பண்ணிக்கொண்டு குருவினிடமே இருந்தான். அவனுக்கு அனுக்ரஹகாலம் வரவில்லை. இந்தச் சமயத்தில் குருவிற்கு ஒரு பெரிய வியாதி வந்துவிட்டது. பகவான் ஸ்வப்னத்தில் தோன்றி, "நீ காசி வாசம் பண்ணினால் உன் வியாதி ஸ்வஸ்தமாகும" என்றார். இந்த மந்த புத்தியான சிஷ்யனுடன் ஐந்தாறு சிஷ்யர்கள் இருந்தார்கள். "நீங்கள் என்னைக் காசிக்கு அழைத்துக்கொண்டு போகிறீர்களா?" என்று குரு கேட்டார். அவர்கள், "எங்களால் முடியாது" என்றார்கள். அப்படித்தான் உலக ஸ்வபாவம். ஒருவனுக்குப் பலhமும் ஆரோக்கியமும் சம்பாத்தியமும் இருக்கும் வரைக்கும் பொண்டாட்டி, பிள்ளைகள், பந்துக்கள் கூட இருப்பார்கள். சம்பாத்தியம் இல்லாவிட்டால் ஒருவரும் லக்ஷ்யம் பண்ண மாட்டார்கள். ஆனால், மந்தபுத்தி, "நான் வருகிறேன்" என்றான். அவனை அழைத்துக்கொண்டு குரு காசிக்கு போனார். அவர் வியாதியோ மிகவும் கஷ்டமான வியாதி. சிஷ்யன் அவரை சிரமப்பட்டு அவரை கங்கைக்கு அழைத்துப் போய் ஸ்நானம் பண்ணி வைத்து அவருக்காக பிக்ஷை வாங்கி அவருக்கு போடுவான். இவ்வளவு செய்தும் குரு  அவனை கோபித்துக் கொள்வார். சாப்பாடு நன்றாக இல்லை என்பார். அப்படியும் தவறாமல் சிஷ்யன் குருவுக்குச் சுச்ரூஷை எல்லாம் பண்ணிக் கொண்டிருந்தான்.


ஒருநாள் சிஷ்யன் கங்கைக்கு சந்தியவந்தனத்திற்காக போகிறான். அப்பொழுது மகாவிஷ்ணு கருடரூடராய் வந்து, சிஷ்யனைப் பார்த்து, " நீ இவ்வளவு தீவீரமாக குருசுச்ரூக்ஷை பண்ணுகிறாயே! ஒரு வரம் கேள்; நான் தருகிறேன்" என்றார். சிஷ்யன் மகாவிஷ்ணுவைப் பார்த்து, "உங்களால் எனக்கு ஆகவேண்டிய காரியம் ஒன்றுமில்லை. எனக்கு உங்களிடத்திலிருந்து ஒரு வரமும் வேண்டாம்" என்று சொன்னான். உடனே மகாவிஷ்ணு சிவனிடத்தில் போய் இதைச் சொன்னார். இரண்டு பெரும் சிஷ்யனிடம் வந்தார்கள். பரமசிவன் சிஷ்யனுக்கு வரம் தருகிறேன் என்றார். மகா விஷ்ணுவுக்கு பதில் சொன்ன படியே சிவனுக்கும் பதில் சொன்னான். பரமேஸ்வரன் நிர்பந்த்தம் பண்ணினார். ஒரு தடவை, இரண்டு தடவை, பல தடவை சொல்லி பார்த்தார். அதன்பேரில், "என் குருவை கேட்கிறேன். அவர் வரம் வாங்கிக் கொள் என்றால் அவருக்கு வியாதி ஸ்வஸ்தமாக  வேண்டும் என்றுதான் கேட்பேன்" என்றான்  சிஷ்யன்.


பிறகு சிஷ்யன் குருவிடம் போய் நடந்ததை சொன்னான். "உனக்கு இஷ்டமிருந்தால் கேள்" என்று குரு சொன்னார். உடனே மகாவிஷ்ணு, பரமசிவன், மற்ற எல்லத்தேவர்களும் வந்து குருவுக்கு வியாதி ஸ்வஸ்தமாக அனுக்கிரகம் பண்ணினார்கள். சிஷ்யனுக்கு குருபக்தியால் எல்லா வித்தைகளும் கிடைத்துவிட்டது.  இதிலிருந்து குரு பக்தி பண்ணினால் வித்தை சம்பத்து எல்லாம் கிடைக்கும் என்று தெரிகிறது.


பித்ருபக்திக்கு  ஒரு கதையுண்டு. நசிகேதன் என்று ஒரு பையன். அவன் தகப்பனார் ஒரு யாகம் பண்ணினார். அந்த யாகத்தில் தனக்கு பிரியமான வஸ்த்துவை தானம் பண்ண வேண்டும். நசிகேஸ் அப்பாவைப்பார்த்து, " என்னை யாருக்குத் தானம் பண்ணப்போகிறீர்கள்?" என்று கேட்டான். ஒரு தரம் கேட்டான். ரெண்டு தரம் கேட்டான். அப்பாவுக்குக் கோபம் வந்ததுவிட்டது.  "உன்னை யமனுக்குத் தானம் பண்ணப் போகிறேன்" என்றார். ஆனால் உடனே மிகவும் துக்கப்பட்டார். அப்பொழுது நசிகேதஸ் அப்பாவைச் சமாதானம் பண்ணினான். " உங்கள் தாத்தா, தாத்தாவுக்குதாத்தா எங்கே போனார்களோ, நீங்களும் எங்கே போகப்போகிறீர்களோ, அங்கே தான் நானும் போகிறேன். அதற்காக நீங்கள் கவலைப்பட வேண்டாம்" என்று யமலோகம் போனான். நசிகேதஸ் யமலோகம் போனபோது யமன் அங்கே இல்லை. பிறகு வந்தததும் நசிகேதசை பார்த்து, "எப்போது வந்தாய்"  என்று கேட்டான். "நான் வந்து மூன்று நாளாயிற்று" என்றான் நசிகேதஸ். மூன்று நாள் காத்திருந்த்ததிற்க்காக யமன் நசிகேதச்சுக்கு மூன்று வரம் கொடுத்தான் முதல் வரத்தால், "என் அப்பாவிற்கு கோபம் தனிய வேண்டும்" என்று கேட்டான். பாக்கி இரண்டு வரம் ஆத்மா தத்வத்தைபற்றி கேட்டான். யமன் முதலில் சொல்ல விரும்பவில்லை. அப்பொழுது  நசிகேதஸ், " சத்யம் என்பது எங்களுக்குத்தனா? உங்களுக்கு இல்லையா? என்று கேட்டான். பிறகு யமன் நசிகேதசுக்கு உபதேசம் பண்ணினான். நசிகேதஸ் வரத்தைப் பெற்றுக்கொண்டு மறுபடியும் தந்தையிடம் வந்தான். அவன் பிரம்ம ஞானியாய் திரும்பி வந்ததை பார்த்து, "உன் பிராப்தி எனக்குக் கிடைக்க வில்லையே, என் அஞ்ஞானம் தொலையவில்லையே! " என்று வருத்தப்பட்டார். இந்தக்கதை பித்ரு பக்தியின் விசேசத்தை காட்டுகிறது.




மாத்ருபக்தி  எல்லாரும் காட்ட வேண்டும். பிறந்தது முதல் கடைசி வரைக்கும் மாதாதான் நம்மைக் காப்பாற்றுகிறாள். நமக்கெல்லாம் மாதா, பிதா, குரு இவர்கள் பிரத்யக்ஷ தெய்வங்கள். அவர்களுக்குக் கைகர்யம் பண்ணிக் கொண்டு எல்லோரும் ஷேமமாய் இருக்க வேண்டும். 




முக்கியமான குறிப்பு:  இக்காலத்தில் ஏட்டுகல்விகளை  பயிற்றுவிக்கும் பள்ளிகூட வாத்தியாரை(உபாத்தியார்கள்) குரு என்று நினைக்கிறார்கள். இது தவறானது. வாழ்வின் அர்த்தத்தை ஞானத்தை உணர வழிகாட்டுபவரே குரு. ஆங்கிலேய ஆதிக்கத்தால் குருவிற்கும், வாத்தியாருக்கும் (உபாத்தியார்) வித்தியாசம் தெரியாமல் நம்மை வளர்த்துவிட்டனர்.

Wednesday 23 March 2011

New blog

........ to be launched from  Kali 5113, Kara varsham, Chiththirai 1,